பதிவு செய்த நாள்
07
டிச
2018
12:12
காஞ்சிபுரம்: ரத்ன அங்கி அலங்காரத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், கோவில் உட்பிரகாரம் சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கார்த்திகை அனுசம் நட்சத்திரம் அன்று, தாததேசிகன் அவதார நாளில், ரத்ன அங்கி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருள்வார்.
உடன், பெருந்தேவி தாயார், கல் இளைத்த கிரீடம் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று நடந்த ரத்ன அங்கி சேவையில், பெருமாள், தாயார் சமேதமாக சிறப்பு அலங்காரத்தில், கோவில் உள் பிரகாரம் சுற்றி, வாகன மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு, பூஜைகள் முடிந்து மதியம், 1:30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை, 6:00 மணிக்கு பெருமாள், திருவடி கோவில் புறப்பட்டு, மீண்டும் கோவிலை சென்றடைந்தார். இரவு, 8:00 மணியில் இருந்து இரவு, 12:00 மணி வரை சாற்றுமுறை நடைபெற்றது. பெருமாள், ரத்ன அங்கி அலங்காரத்தில், ஆண்டுக்கு இரு முறை எழுந்தருள்வார். நேற்றும், அடுத்ததாக, வைகுண்ட ஏகாதசி அன்றும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை, பகல் பத்து உற்சவம் துவங்குகிறது.