பதிவு செய்த நாள்
08
டிச
2018
11:12
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு அதி காலையில் அம்மனுக்கு விசேஷ பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனையும் நடந்தது. இரவு 11.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் இருந்த அங்காளம்மனை சிவ வாத்தியங்கள், மேள, தாளம் முழங்க ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு விசேஷ பூஜையுடன் ஊஞ்சல் தாலாட்டு துவங்கியது. இதில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். நுாற்றுக்காணக்கான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இரவு 12.30 மணிக்கு மகா தீபாராதனை மகா தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ் மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் உட்பட 400 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, வேலுார், கடலுார், புதுச்சேரி உட்பட பல ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர்.