பதிவு செய்த நாள்
08
டிச
2018
12:12
கொளத்தூர்: கோவிந்தப்பாடியில், 42 ஆண்டுகளுக்கு பின், தாய்வீடு திரும்பிய அம்மனை, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கொளத்தூர், காவேரிபுரம் ஊராட்சி, கோவிந்தப்பாடியிலுள்ள மாரியம்மன் கோவில், கோவிந்தப்பாடி, கொல்லப்பட்டியை சேர்ந்த இருதரப்பினர் மோதலால், 20 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால், மாரியம்மன் பஞ்சலோக உற்சவர் சிலை, 42 ஆண்டுகளாக, அருகிலுள்ள திரவுபதியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கோவிலை மக்கள் வழிபாட்டுக்கு திறக்க, மேட்டூர் ஆர்.டி.ஓ., லலிதா, தாசில்தார், கடந்த, 5ல் கோவிலுக்கு சென்றனர். அவர்களை, ஒரு தரப்பினர் முற்றுகையிட்டு, திரவுபதியம்மன் கோவிலில் உள்ள சிலையை கொண்டு வந்து, மாரியம்மன் கோவிலில் வைத்தால், நடைதிறக்க அனுமதிப்போம் என்றனர். அப்போது, டிச., 7ல் சிலையை ஒப்படைப்பதாக மற்றொரு தரப்பினர் கூறினர். அதன்படி, நேற்று மதியம், 1:00 மணிக்கு, ஆர்.டி.ஓ., முன்னிலையில், வருவாய்த்துறையினர், சிலையை, மாரியம்மன் கோவிலில் கொண்டு வந்து வைத்தனர். 42 ஆண்டுகளுக்கு பின், சிலை, மாரியம்மன் கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டது. இதனால், சுற்றுப்பகுதி பக்தர்கள், பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். மாரியம்மன் கோவில் பொறுப்பு, காவேரிபுரம் ஊராட்சி செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அசம்பாவிதத்தை தவிர்க்க, 10 நாட்களுக்கு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.