பதிவு செய்த நாள்
08
டிச
2018
03:12
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே சூட்டுப் பொத்தை மலையில், திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் இருந்து ஏர்வாடி செல்லும் சாலையில், சூட்டுப் பொத்தை மலை உள்ளது. மலை அடிவாரத்தில் வாழ்ந்த, முத்துக்கிருஷ்ண சுவாமி, 174வது வயதில், அங்கு ஜீவசமாதி அடைந்தார்.
சுப்பம்மாள் என்பவர், முத்துக்கிருஷ்ண சுவாமியை தரிசிக்க, மகன் மாணிக்கவாசகத்தை அழைத்துச் சென்றார். அப்போது, மாணிக்க வாசகத்தை, சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார். மாணிக்கவாசகம், 1969ல் ஸ்ரீமுத்துக்கிருஷ்ண சுவாமி, மிஷன் டிரஸ்ட் ஏற்படுத்தி, பொது சேவை, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டார்.
பின், அவரது மகள் வித்தம்மாவிடம் டிரஸ்டை ஒப்படைத் தார்.இங்கு தினமும், மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆதுரசாலை எனும் மருத்துவ சேவை மையம் மூலம் சேவை செய்து வருகிறார். தோல், கண், எலும்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப் படுகின்றன.ஸ்ரீவித்யா மந்திர் மகளிர் இலவச பள்ளி, ஸ்ரீலலிதகலா மந்திர் என்னும் கவின் கலை பயிற்சி மையம் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
ஸ்ரீலலிதகலா மந்திர் மாணவர்களை கொண்டு, 63 நாயன்மார்களின் வாழ்க்கை சரித்திரத்தை, நாடகமாக அரங்கேற்றி வருகின்றனர். குழந்தைகளுக்கு நல்லொழுக்கம், ஆன்மிகம், பண்பாடு ஆகியவற்றை கற்றுத் தரும் வகையில், ஞாயிறு தோறும் சமய வகுப்புகள் நடத்தப் படுகின்றன.
மாதம்தோறும் பவுர்ணமி அன்று காலை, 5:00 மணிக்கு சூட்டுப்பொத்தை மலையை சுற்றி, கிரிவலம் நடக்கிறது.கார்த்திகை மாதம் வளர்பிறை தசமியில், முத்துக்கிருஷ்ண சுவாமி களின் குருபூஜை தினத்தில், கிரிவலத்தின் போது தேரோட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு தேரோட்டத்தின் போது, திருக்கார்த்திகை தினத்தன்று, சூட்டுப் பொத்தை மலை மீது, அரசு அனுமதியுடன், மாதாஜி வித்தம்மா, திருக்கார்த்திகை தீபம் ஏற்றினார்.