பதிவு செய்த நாள்
08
டிச
2018
03:12
சென்னை: சோளிங்கர் மலை கோவிலுக்கு ரோப் கார் அமைக்கும் பணி, மூன்றாவது முறையாக திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், சோளிங்கரில், 750 அடி உயரமுள்ள மலைக்குன்றின் மீது, யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மற்றொரு மலையில், 350 அடி உயரத்தில், யோக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இது, 108 வைணவ திவ்ய தலங்களில் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள், சோளிங்கர் மலை மீது ஏறிச்சென்று நரசிம்ம சுவாமியை தரிசிக்க சிரமமாக இருக்கிறது.
எனவே, எளிதில் சுவாமியை தரிசிக்க ரோப் கார் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.அதன்படி, 2006ல், 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், ரோப் கார் அமைக்கும் பணி துவங்கியது. அப்போது, விபத்து ஒன்று ஏற்பட்டதால், திடீரென நிறுத்தப்பட்டது.
பின், 2009ல் மீண்டும் துவங்கிய பணிகள், என்ன காரணத் தினாலோ நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து, 2014ல் மறு மதிப்பீட்டில், 9.5 கோடி ரூபாய் என்று முடிவு செய்து, ரோப் கார் அமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கின. இதில், 125 குதிரை திறனுள்ள மோட்டார்கள் பொருத்தப்பட்டு, நான்கு நவீன கேபின்களால் ஐந்து ரோப் கார்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த ஜூலையில் மாவட்ட கலெக்டர் ராமன் திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது, நான்கு மாதங்களுக்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தர விட்டார். தற்போது, 75 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகள் முடிக்கப்படாமல், அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து, சோளிங்கர் மலைக்கோவில் நிர்வாக தரப்பில், கிடைத்த தகவல்கள் வருமாறு: ரோப் கார் அமைக்க டெண்டர் எடுத்த பிரதான கான்ட்ராக்டர், சப் - கான்ட்ராக்டரை நியமித்து பணிகளை செய்வதாகவும், அவருக்கு,10 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்திருப்பதாகவும் தெரிகிறது. இதனால், அவர் பணிகளை நிறுத்தி, தொழிலாளர்களை அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ரோப் கார் திட்டம் எப்போதுதான் நிறைவேறுமோ என்ற வேதனை பக்தர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. எனவே, இதில், இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக தலையிட்டு, ரோப் கார் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.