பதிவு செய்த நாள்
08
டிச
2018
04:12
கூடலூர்: கூடலூர் -லோயர் கேம்ப் இடையே அமைந்துள்ள தம்மணம்பட்டியில் 1989ல் உமா ஆனந்த்நாத் சுவாமிகள் மூலம், சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க குடிசை அமைக்கப்பட்டது. அதன்பின் அவர்களின் வருகை அதிகரித் ததை தொடர்ந்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களின் நன்கொடையால் சபரிமலை அடிவார ஐயப்பன் கோயில் கட்டப்பட்டது.
2003 ல் சபரிமலை ஸ்ரீகண்டாறு ராஜிவ் தந்திரியால் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சபரிமலை கோயிலைப் போன்றே 18படிகள். பின்வாசல் என அமைக்கப் பட்டது.கார்த்திகை 1 முதல் தை 5ம் தேதி வரை முழுவதும் நடைதிறக்கப்பட்டு அபிஷேகம், சிறப்பு பூஜை நடக்கும்.
தமிழ் மாதத்தில் முதல் 5 நாட்களும் சிறப்பு பூஜை, சபரிமலையில் மகரஜோதி நடக்கும் போது, இக்கோயிலிலும் படிபூஜை நடத்தப்படும்.
அர்ச்சகராக ஒவ்வொரு ஆண்டும் சேவை செய்யும் மனப்பான்மையில் தாமாகவே முன் வந்து பணியை செய்கின்றனர்.
2011ம் ஆண்டில் பெரியாறு அணைப்பிரச்னை ஏற்பட்டபோது, தமிழகத்தில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இக்கோயிலுக்கு இருமுடியுடன் வந்து தரிசித்தனர்.
கோயில் நிர்வாகி மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:இக்கோயிலில் சபரிமலை சீசன் நேரத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவோர் சுவாமியை தரிசிக்கின்றனர். திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம் கிட்டுதல், தொழில் வெற்றி உள்ளிடட பல்வேறு வேண்டுதல்களை ஐயன் நிறைவேற்றுகிறார், என்றார். மேலும் விபரங்களுக்கு: 95973 96596.