பதிவு செய்த நாள்
10
டிச
2018
12:12
ஈரோடு: கருங்கல்பாளையம், சின்னமாரியம்மன் கோவில் குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து கம்பம் நடுதல், பூவோடு வைத்தல் நடந்தது. இதை தொடர்ந்து தினமும், அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் ஆராதனை நடந்தது.
விழா முக்கிய நிகழ்ச்சியான, குண்டம் இறங்குதல் நேற்று நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து, அம்மன் அழைப்பு நடந்தது. அதை தொடர்ந்து தலைமை பூசாரி பிரகாஷ் மற்றும் ராஜா, பூவோடு ஏந்தி குண்டம் இறங்கி தொடங்கி வைத்தனர். ஈரோடு மாநகர், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், மற்றும் திருநங்கையர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவையொட்டி கருங்கல்பாளையம் போலீசார், பாதுகாப்பில் ஈடுபட்டனர். மதியம் தேரோட்டம் நடந்தது. தீர்த்த ஊர்வலம், அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்து வருதல், நாளை நடக்கிறது. பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம், 11ல் நடக்கிறது. கம்பம் எடுத்தல், 12ல், மஞ்சள் நீராட்டு, 13ல் நடக்கிறது.