பதிவு செய்த நாள்
13
டிச
2018
03:12
சென்னிமலை: வெள்ளோடு, மாரியம்மன் கோவிலில் நடந்த பொங்கல் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சென்னிமலை ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளோட்டில் உள்ள, 100 ஆண்டுகள் பழமையான சுயம்பு மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா கடந்த மாதம், 27 இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 7ல் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல், தினமும் பெண்கள் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வந்தனர். நேற்று பொங்கல் விழா நடந்தது. முன்னதாக, பல கிராமங்களை சேர்ந்த பெண்கள், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற கோவிலுக்கு முன்பாக ஆடு, கோழிகள் பலியிட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடந்தது.