பதிவு செய்த நாள்
18
டிச
2018
01:12
கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், ௪௪வது கலை விழாவில், ஐஸ்வர்யா ஸ்ரீநிவாஸ், கஞ்சதளாயதாக் ஷி என்ற கமலாமனோகரி ராகத்தில் அமைந்த தீஷிதரின் கிருதியில், நிரவலையும், ஸ்வரங்களையும் பாடி அசத்தினர். பின், நாட்டக்குறிஞ்சி ராகத்தில், மாமவஸதா என்ற ஸ்வாதி திருநாள் கீர்த்தனையில்,லலிதாமணி ஹார எனும் இடத்தில், கற்பனை ஸ்வரங்களை பாடினார். இவை இரண்டுமே, இசை மீதான இவரது ஆர்வத்தை பிரதிபலித்தன.வரநாரத என்ற விஜயஸ்ரீ ராக தியாகராஜ கிருதியையும், பைரவிக்கென்றே இருக்கும், கொலுவ மரகதாவையும் கையாண்டு, ராக ஸ்வரூபத்தை வடிவமைத்தார். மைக் ஏற்பாட்டில், ஏகப்பட்ட சிக்கல்கள். இந்த பிரச்னையில், ஐஸ்வர்யாவுக்கு, சுருதியின் ஒலி எப்படி கேட்டிருக்கும் என, சந்தேகம் எழுந்தது.
பக்க வாத்தியக்காரர்கள், வயலினில் வி.வி.ரவியும், மிருதங்கத்தில் டில்லி சாய்ராமும், கஞ்சிராவில் புருஷோத்தமனும், தங்கள் வாசித்தலை தொடர்ந்து செய்து முடித்தனர்.பெரம்பூரில் ஜோர்!மார்கழி சீசனில், வட சென்னையில், இசை நிகழ்ச்சிகள் பெரியளவில் நிகழாமல், வறண்டு காணப்படுகின்றன. இந்தப் போக்கை மாற்றிஅமைக்க, பெரம்பூர் சங்கீத சபா, சங்கராலயத்தில், ஐந்து நாட்களுக்கு மார்கழி இசை விழாவை நடத்துகிறது; பாராட்ட வேண்டிய முயற்சி.இதில் பாடிய காஷ்யப் மகேஷ், தன் கச்சேரியை துவக்கியது, சவுந்தர்ய லஹரி சுலோகத்துடன். தொடர்ச்சியாக, கஞ்சதளாயதாக் ஷி! தியாகராஜரின், நாததனுமனிசம் பாடி, பின், ஒரு விருத்தமும், பெரியசாமி துாரனின், என்ன பெரும் தவம் என்ற பாடலையும் அளித்தார். இடையே வந்தது, ஹிந்தோளத்தில், காஞ்சி பெரியவரை பற்றிய, மகாராஜபுரம் சந்தானத்தின் பாடல்.இது போன்ற வரிசையில், பாடல்களையும், அவை குறித்த விளக்கங்களையும் அளித்து, வந்திருந்தவர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தினார். வாசஸ்பதிக்கு ஒரு விபரமான ஆலாபனை; இதற்கான கிருதி, அனைவரையும் உடன் பாட வைக்கும், பாபநாசம் சிவனின், பராத்பரா! இதற்கு திருப்தியளிக்கும் நிரவல் ஸ்வரங்கள். பக்கவாத்தியக்காரர்கள், ஸ்ரீரங்கம் ஆனந்த் வயலினில், உத்தமர் கோவில் ஹரிபிரசாத் மிருதங்கத்தில், விஷ்ணுபுரம் ரகு முகர்சிங்கில். மூவரும் அவரவர் நிலையறிந்து, கச்சேரியின் மனோபாவத்திற்கேற்ப வாசித்தது, மெச்சும்படி இருந்தது.- எஸ்.சிவகுமார்