பதிவு செய்த நாள்
19
டிச
2018
12:12
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்த சொர்க்க வாசல் திறப்பு விழாவில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசன் பெருமாள், நாகல் நகர் வரதராஜா பெருமாள், எம்.வி.எம். நகர் வெங்கடாஜலபதி, தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள், செட்டிநாயக்கன்பட்டி ஸ்ரீநிவாச பெருமாள், ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் .நடந்தது. சுவாமி அம்பாள் ரதத்தில் கிளம்பி சொர்க்க வாசல் வழியே பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இரவில் கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநி: பழநி மேற்குரத வீதியிலுள்ள லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது. பின், 4:30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு லட்சுமிநாராயணப்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளினார். இதேபோல பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள்கோயிலில், காலை 6:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது, வரதராஜப்பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி அருள்பாலித்தனர். இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன், டி.எஸ்.பி., விவேகானந்தன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கண்ணாடிப்பெருமாள் கோயில், வேணுகோபால சுவாமிகோயில் உள்ளிட்ட கோயில்களில் அபிஷேக பூஜைகள் நடந்தது. பழநி புஷ்ப கைங்கரிய சபா சார்பில், லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் ஆயிரம் கிலோ பொருட்களில் தயார் செய்த புளியோதரை, பொங்கல், தயிர் உள்ளிட்ட எட்டுவகை சாதங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் காலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக பஜனை மடத்தில் இருந்து ராமர் சுவாமி புறப்பட்டு பெருமாள் கோயிலுக்குள் எழுந்தருளினார். சன்னதியில் இருந்து புறப்பட்ட ஆழ்வார் சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் வந்தார். பக்தர்கள் கோஷமிட்டு வணங்கினர். கருட வாகனத்தில் அருள்பாலித்த பெருமாள் காலை 7:00 மணிக்கு சொர்க்க வாசல் வழியே புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்தார். திருச்சி ரோடு பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
எரியோடு: எரியோடு சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் அலங்கார திருமஞ்சனத்தை தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. எ.பண்ணைப்பட்டி பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மண்டபம் புதுார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தி இன்னிசை, ஆன்மிகசொற்பொழிவு நடந்தது.