பதிவு செய்த நாள்
24
டிச
2018
04:12
சேலம்: சேலம் மாவட்டத்திலுள்ள, சிவன் கோவில்களில், நேற்று, (டிசம்., 23ல்)ஆருத்ரா தரிசன பூஜை கோலாகலமாக நடந்தது.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், நடராஜர், சிவகாமி அம்மனுக்கு, நேற்று முன்தினம் (டிசம்., 22ல்)நள்ளிரவு, 12:00 மணி முதல், விடிய விடிய, 12 வகை திரவியங்களில், அபிஷேகம்ம் நடந்தது.
நேற்று (டிசம்., 23ல்) காலை, நடராஜர் சமேத சிவகாமியம்மன், ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தனர். மூலவர் சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகைக்கு, தங்க கவசம் சாத்தப்பட்டது.
உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சிவகாமியம்மன், நடராஜர், மூலவர் திருமேனி, உற்சவர் திருமேனிகளுக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம், கரும்புச்சாறு உள்பட, 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சந்தனகாப்பு மற்றும் சர்வ அலங்காரத்தில், சிவகாமியம்மன், நடராஜர், பல்லக்கில் எழுந்தருளி, ஆனந்த களி நடனம் ஆடியபடி, பக்தர்கள், கோவிலை வலம்வரச்செய்து, ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளித்தனர். பின், சிவகாமியம்மன் கோவிலுக்கு சென்று, கதவை அடைத்து நடராஜரை உள்ளே விட மறுத்தது, சுந்தரமூர்த்தி, நாயனார் இடையே தூது சென்று சமாதானம் செய்த திருஊடல் நிகழ்ச்சி நடந்தது. அதை, கோவிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
அதேபோல், இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், செவ்வாய்ப்பேட்டை அம்பலவாணர், சீரகாபாடி, 1,008 சிவாலயம், தாரமங்கலம் கைலாசநாதர், ஆத்தூர், கோட்டை, காயநிர்மலேஸ்வரர், வசிஷ்டநதி தென்கரை கைலாசநாதர், தென்பொன் பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், நடராஜர், சிவகாமியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பக்தர்கள், பனிப்பொழிவை பொருட்படுத்தாமல், வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.