திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ராபத்து உற்சவம் கடந்த 18ம்தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு‚ ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளினார்.கோவிலை வலம்வந்து‚உடையவர் சன்னதியில் மண்டகபடி முடிந்து பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு‚ நம்மாழ்வார் எதிர்கொண்டு சேவிக்க‚பரமபத மண்டபத்தில் எழுந்தருளினார்.இரவு 8:00 மணிக்கு‚ திருவாய்மொழி சேவைசாற்றுமறை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. பெருமாள் மெல்லிய இழைகொண்ட போர்வையால் திருமுகம் தெரிய போர்த்தப்பட்டு‚ ஆஸ்தானம் எழுந்தருளினார். ராபத்து உற்சவத்தின் 10 நாட்களும் இச்சேவை நடக்கிறது. சிறப்பான இந்த காட்சியை காணும் பக்தர்களுக்கு பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். விழாவின் நிறைவு நாளான இன்று இரவு நம்மாழ்வார் மோட்சம் அடையும் வைபவம் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.