பதிவு செய்த நாள்
29
டிச
2018
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை பிரசாதம், பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, பாக்கெட் செய்யும் பணி துவங்கியுள்ளது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீபத் திருவிழாவில், 2,668 அடி உயர மலை உச்சியில், நவ., 23ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது.
இதில் சேகரிக்கப்பட்ட, தீப மை பிரசாதம், ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, மஹா தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணியில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை உடன், தர்ப்பை, மாங்குச்சி கட்டை, அருகம்புல், வில்வ இலை, கரிகாலகட்டை ஆகியவை சேர்த்து தயாரிக்கப்பட்ட விபூதி, சுவாமி அபிஷேக விபூதி, வாசனைப் பொருட்களான ஜவ்வாது, அரகஜா, ரவுசான் போன்ற பொருட்கள் சேர்த்து ஒன்றாக கலக்கப்பட்டு, அதை அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனிடம் வைத்து சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படவுள்ளது. தீப மை பிரசாதத்தை பக்தர்கள் இடுவதால், ஏவல் பயம் நீங்கி, காரிய சித்தி பலன் கிடைக்கிறது என்பது, பக்தர்களின் நம்பிக்கை.மஹா தீபம் ஏற்ற, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, 10 கிராம் தீப மை, பிரசாத விபூதி, குங்கும பிரசாதம் அடங்கிய பாக்கெட் சேர்த்து வழங்கப்படும். மற்ற பக்தர்கள், 10 ரூபாய் கட்டணம் செலுத்தி, கோவில் நிர்வாகத்திடம் பெற்றுக் கொள்ளலாம்.