திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா நிறைவடைந்தது.இக்கோயிலில் டிச., 24 காப்புக்கட்டுடன் துவங்கிய இத்திருவிழாவில் தெய்வானை மட்டும் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். மூலிகை எண்ணெய் சாத்துப்படி செய்யப்பட்டு, அம்மனின் கீரிடத்தில் கருமுடி சாத்துப்படியாகி, வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசிமூலம் பல் துலக்குதல், மை இட்டு கண்ணாடி பார்க்கும் நிகழ்ச்சிகள் முடிந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி டிச., 27 வரை நடந்தது.நேற்று நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் முடிந்து அம்மன் பல்லக்கில் வீதி உலா வந்தார். விழா காலங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுடன் எழுந்தருள்வது வழக்கம். தெய்வானை அம்மன் மட்டும் புறப்பாடாவது ஐப்பசி பூரம், எண்ணெய் காப்பு திருவிழாக்களில் மட்டுமே.