மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
பதிவு செய்த நாள்
30
டிச 2018 12:12
சபரிமலை: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, இன்று மாலை, நடை திறக்கப்பட உள்ளது.ஜன., 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.மண்டல பூஜை முடிந்து, 27-ம் தேதி இரவு, 11:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. அதன்பின், மகரவிளக்கு காலத்துக்கான ஆயத்த பணிகள் நடைபெற்றன.
தேவையான பொருட்கள் அனைத்தும், டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்டன. சுற்றுப்புறங்கள் துாய்மைப்படுத்தப்பட்டன.இதைத் தொடர்ந்து, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, இன்று மாலை, நடை திறக்கப்பட உள்ளது. இன்று மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு எந்த பூஜைகளும் கிடையாது. இரவு, 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.நாளை அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்ததும், அபிஷேகத்துக்கு பின், மகரவிளக்கு கால நெய்யபிஷேகத்தை, தந்திரி கண்டரரு ராஜீவரரு துவங்கி வைப்பார். ஜன., 18 வரை நெய்யபிஷேகம் நடைபெறும்.மகரஜோதி தரிசனம், ஜன., 14-ம் தேதி நடைபெறுகிறது. அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள், 12-ம் தேதி பந்தளத்தில் இருந்து புறப்படுகின்றன.மண்டல காலத்தின் கடைசி நாட்களில் பெண்கள் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. மகரவிளக்கு காலத்தில் இது போன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போவதில்லை என, போலீசார் முடிவெடுத்து உள்ளனர்.
|