பதிவு செய்த நாள்
31
டிச
2018
11:12
திருத்தணி: முருகன் கோவிலில் இன்று, திருப்படி திருவிழாவும், நாளை, புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் உள்ளன. ஓராண்டிற்கு, 365 நாட்களை குறிக்கும் வகையில் படிகள் அமைக்கப்பட்டுள்ளதால், இக்கோவிலில், ஆண்டுதோறும், டிச., 31ம் தேதி திருப்படித் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று, திருப்படித் திருவிழா நடக்கிறது. படித்திருவிழாவின் போது, கோவில் நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.இதுதவிர, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றுவர்.தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து, நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர், மலைக்கோவிலுக்கு வந்து, பக்தி பாடல்களை பாடியவாறு, மலைக்கோவிலுக்கு நடந்து சென்று வழிபடுவர்.இன்று காலை, 10:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உடன், வெள்ளி மயில் வாகனத்தில், மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நள்ளிரவு, 12:01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை மற்றும், நாளை, புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிப்பர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனத்தை ஒட்டி, கோவில் வளாகம் மற்றும் மலைப்பாதை ஆகிய இடங்கள், வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.திருத்தணி டி.எஸ்.பி., சேகர் தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.