பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒரு லட்சம் ‘டியூப் லைட்’
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2019 11:01
திண்டுக்கல்: பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக ஒரு லட்சம் ‘டியூப் லைட்’ பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூச விழா ஜன.,15ல் துவங்கி ஜன., 24 வரை நடக்கிறது. திண்டுக்கல் – பழநி வரை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக ரோட்டோரம் பேவர் பிளாக் கற்களால் 63 கி.மீ., நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இப்போதே தைப்பூசத்தையொட்டி மாலை அணிந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வர துவங்கியுள்ளனர். இரவில் நடக்கும்போது பலர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இரவில் நடந்து செல்ல வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ‘டியூப் லைட்: பக்தர்கள் வசதிக்காக ரோட்டோரங்களில் தற்காலிக தங்கும் குடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை, நத்தம், கோவை, தாராபுரத்தில் இருந்து திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியே பழநி செல்லும் பாத யாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நடைபாதை மற்றும் ரோட்டோரங்களில் ஒரு லட்சம் ‘டியூட் லைட்’ பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் சார்பில் இரவில், அதிகாலையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு கையில் மாட்டிக் கொள்ள ஒளிரும் கைப்பட்டை, ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.