பதிவு செய்த நாள்
02
ஜன
2019
12:01
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த திருப்படித் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நான்கு மணி நேரம்வரை, நீண்ட வரிசையில் காத்திருந்து,மூலவரை தரிசித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில், திருப்படித் திருவிழா நேற்று முன் தினம் துவங்கியது.விழாவையொட்டி, காலை, 9:30 மணிக்கு சரவணப் பொய்கை அருகில் உள்ள மலையடிவாரத்தில், படித் திருவிழா துவங்கியது.கோவில் நிர்வாகம் சார்பில், 365 படிகளிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைக்கப்பட்டது.பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த,நுாற்றுக்கணக்கான பஜனை கோஷ்டியினர், ஒவ்வொரு படியிலும், பக்தி பாடல்கள் பாடிவாறு, மலைக்கோவிலுக்கு சென்று, மூலவரை வழிபட்டனர்.மேலும், பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை தீர்க்க, ஒவ்வொரு படிக்கும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றியவாறு மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.காலை, 11:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி - தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நள்ளிரவு, 12:01 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நான்கு மணி நேரம் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர்.