நத்தம் ரோட்டில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2019 02:01
நத்தம்: பழநி தண்டாயுதபாணி கோயில் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூச விழா வருகிற ஜன., 21ல் நடக்கிறது. ஆண்டு தோறும் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, குன்றக்குடி, பொன்னமராவதி, புதுக்கோட்டை, பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதிகளில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் நத்தம், திண்டுக்கல் வழியாக பாதயாத்திரையாக பழநி செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு விழாவிற்கு இரு வாரங்களே உள்ள நிலையில் நத்தம் ரோட்டில் பக்தர்கள் பாதயாத்திரை செல்ல துவங்கியுள்ளனர். சமீபத்தில் பெய்த மழைக்கு ரோட்டின் இருபுறமும் செடி கொடிகள் முளைத்து புதர் மண்டியுள்ளது.
இதனால் நடந்து செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. சில இடங்களில் ரோட்டோரத்தில் பெரிய பள்ளங்கள் உள்ளன. புதர் இருப்பதால் பள்ளங்கள் தெரிவதில்லை. புதர்களை தவிர்க்க ரோட்டில் நடந்து செல்வதால் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
புதரில் மறைந்திருக்கும் விஷ ஐந்துக்களாலும் பக்தர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோட்டோர புதர்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.