சாயல்குடி:சாயல்குடியில் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற மீனாட்சி சமேத கைலாசநாதர் கோயில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. கும்பாபிேஷகம் நடந்து 100 ஆண்டுகளை கடந்த நிலையில் பராமரிப்பின்றி உள் மற்றும் வெளி பிரகாரங்கள் சிதிலமடைந்து வருகிறது.பல்லவர் காலத்திற்கு பின் பாண்டியர்கள், சேதுபதி மன்னர்கள் கோயிலில் திருப்பணி செய்துள்ளனர்.இங்கு கைலாசநாதர் சிவன், மீனாட்சி அம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர். ஆண்டிற்கு ஒருமுறை சிவராத்திரி நாளில் மட்டும் பக்தர்கள் மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள வட்ட வடிவமான பிரகாரச்சுற்றுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கடற்பாறை கற்கள் மற்றும் கருங்கல்லினால் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழமையான சுதை சிற்பங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது. ஒரு ஏக்கரில் அமைந்த சிவன் கோயிலுக்கு முன்பு 3 ஏக்கரில் கைலாசநாதர் கோயில் தெப்பக்குளம் உள்ளது.பக்தர்கள் கூறியதாவது; கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு பக்தர்களின் நன்கொடையால் பொலிவு மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டது.ராமநாதபுரம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள 54 கோயில்களில் இந்த சிவாலயமும்ஒன்றாகும்.ஆனால் இதுவரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு எந்த சூழ்நிலையும் அமையாமல் உள்ளது. மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு, சங்கடகர சதுர்த்தி, சஷ்டி, மாதாந்திர சிவராத்திரி, அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய நித்திய பூஜைகள் கோயில் ஸ்தானிக குருக்கள் மூலம் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், என்றனர்.