பதிவு செய்த நாள்
07
ஜன
2019
11:01
சாத்துார்:துாத்துக்குடி மாவட்டம் கழகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று மலர்காவடித்திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர்- துாத்துக்குடி மாவட்ட முருகபக்தர்கள் பேரவை அறக்கட்டளை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து 6 ம் ஆண்டு மலர்க்காவடி (பூச்சொரிதல்) விழா நேற்று காலை 11:30 மணிக்கு நடந்தது. முன்னதாக காலை 5:30 மணிக்கு கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கிரிவல யாத்திரை துவக்கம்: மயிலம் ஆதீனம் சிவஞானபாலயசுவாமிகள், தமிழ்நாடு முருகபக்தர்கள் பேரவை அறக்கட்டளை கோவை கெளமார மடாலயம் குமரகுருபரசுவாமிகள், செங்கோல்ஆதீனம் சிவபிரகாசதேசிக சத்தியஞான பரமாச்சதர்ய சுவாமிகள், கல்லிடைகுறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பராமச்சார்ய சுவாமிகள், கூனம்பட்டி கல்யாணபுரிஆதீனம் ராஜசரவண மாணிக்க வாசக சுவாமிகள் அருளாசி ஆற்றி 1008 மலர் காவடிதிருவிழாவையும் கிரிவல யாத்திரையை துவக்கி வைத்தனர்.
அரோகரா கோஷம்: யானை, குதிரை, மற்றும் மேளதாளம் முழங்க பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் கிரிவலம் வந்து கோயிலை அடைந்தனர். 12:45 மணிக்கு சுவாமிக்கு மலர் சொரிதல் அபி ஷேகம் நடந்தது. இதன் பின் மகாதீபாராதனை நடந்தது. பக்தர்கள் முருகனுக்கு ஆரோகரா கோஷமிட்டுவணங்கினர். திருச்செந்துார் ஆண்டவர் அன்னதானம் அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சாத்துார்,சிவகாசி, வெம்பக்கோட்டை, கோவில்பட்டி, சங்கரன் கோவில், ராஜபாளையம், திருத்தங்கல், ஸ்ரீவில்லிப்புத்துார்,விருதுநகர், திருவண்ணாமலை, பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தொழில்அதிபர்கள் சாமி தரிசனம் செய்தனர்.