பதிவு செய்த நாள்
08
ஜன
2019
11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இருந்து ஊர்ந்து சென்ற கோதண்டராமர் சிலையை, மக்கள் வழிபட்டனர். கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க, அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதில், சிலை வடிவமைக்க, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட கல், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில், 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது.
திருவண்ணாமலையில், முகம் மட்டும் வடிவமைக்கப்பட்டு, கடந்த மாதம், 7ல், 240 டயர்கள் கொண்ட, கார்கோ லாரியில் பாறை ஏற்றப்பட்டு, அங்கிருந்து கர்நாடகாவுக்கு புறப்பட்டது. பின், விழுப்புரம் மாவட்டத்தை கடந்து, கடந்த, 4ல், திருவண்ணாமலை மாவட்டம், வேடந்தவாடி வந்தடைந்தது. கடந்த, 5ல், லாரி புறப்பட்டு, மங்கலம் வழியாக, திருவண்ணாமலை பைபாஸ் சாலையை அடைந்தது. நேற்று முன்தினம், பயணத்தை தொடர, திருவண்ணாமலை நகரில் உள்ள, சாலை டிவைடர்கள் அகற்றும் பணி நடந்தது. நேற்று காலை, மீண்டும் புறப்பட்டு, திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டை, கடந்து கிரிவலப்பாதையில், அண்ணா நுழைவு வாயில் அருகே, நேற்று மாலை, 4:30 மணிக்கு சென்றது. இதில், 5 கிலோ மீட்டர் துாரத்தை கடக்க, 10 மணி நேரமானது. தொடர்ந்து, செங்கம் வழியாக, ஊத்தங்கரை, செல்ல உள்ளது. வழி நெடுகிலும், தீபாராதனை காட்டி பக்தர்கள் வழிபட்டனர்.