பதிவு செய்த நாள்
10
ஜன
2019
01:01
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பழைய சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோவிலுக்கான, தேர் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பொள்ளாச்சி அருகே பழைய சர்க்கார்பதியில், குண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில।ல், பழங்குடியின மக்கள் வழிபட்டு வருகின்றனர். பராமரிப்பில்லாமல் இருந்த கோவில் புனரமைக்கப்பட்டு, மார்ச் மாதம் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கோவிலுக்கு தேர் செய்யும் பணி மேற்கொள்ள பழங்குடியின மக்களுடன் இணைந்து சேவாலயம் அமைப்பினர் திட்டமிட்டனர்.இதற்காக, சென்னை மகாபலிபுரம் பகுதியை சேர்ந்த தட்சர்கள், சூளேஸ்வரன்பட்டி பகுதியில் தங்கி தேர் தயாரிக்கும் பணியில் கடந்த, ஒன்றரை மாதங்களாக ஈடுபட்டுள்ளனர்.சேவாலயம் அமைப்பினர் கூறியதாவது:கோவில் புதுப்பிக்கப் பட்டு, கும்பாபிேஷகம் நடந்தது.
பழமை வாய்ந்த கோவிலில், தை அமாவாசை நோன்பு சாட்டப்பட்டு, 18 நாட்கள் திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழாவில், குண்டத்தில் தேர் இறங்கிய பின், வீதி உலா செல்வது வழக்கம்.கோவிலில் இருந்த பழைய சப்பரத்துக்கு மாற்றாக, 15 லட்சம் ரூபாய் செலவில் தேர் தயாரிக்கும் பணி நடக்கிறது. மொத்தம், ஆறு அடுக்கு கொண்டதாகவும்; எட்டு பட்டம் கொண்டதாகவும் தேர் வடிவமைக்கப்படுகிறது. தேக்கு, இழுப்பை, வேங்கை, கல் வாகை மரங்கள் தேர் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. தேரில், கலசம் வைக்கும் பகுதியில், கருங்காளி மரம் பயன்படுத்தப்படுகிறது.குண்டத்தில் தேர் இறங்கி செல்வதற்கு வசதியாக, இரும்பு வீல் அமைக்கப்படுகிறது. பணிகள் தை அமாவாசை திருவிழா துவங்குவதற்கு முன், முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.