பதிவு செய்த நாள்
11
ஜன
2019
11:01
சபரிமலை: சபரிமலையில், மகர விளக்குக்கு முன்னோடியாக, சுத்தி கிரியை பூஜைகள், நாளை துவங்குகின்றன. மகரஜோதி தரிசனத்துக்கு, சபரி மலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாதுகாப்புக்காக, 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில், பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகரஜோதி நாளில் நடக்கும் மகர சங்கரம பூஜைக்கு முன்னோடியாக, சுத்திகிரியை, நாளை துவங்குகிறது. நாளை மாலை, பிராசாத சுத்தி பூஜைகள் நடக்கவுள்ளன.
நாளை மறுநாள், உச்சபூஜைக்கு முன், பிம்ப சுத்தி பூஜைகள் நடக்கும். தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் இந்த பூஜைகளை நடத்துவர். மகரவிளக்கு பாதுகாப்பில், 3,000 போலீசார் ஈடுபடுகின்றனர். எஸ்.பி., அந்தஸ்திலான இரண்டு தனி அதிகாரிகள், சுழற்சி முறையில் பணிகளை கண்காணிக்கின்றனர். சன்னிதானத்தில், போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு, 24 மணி நேரமும், 100 போலீசார் தயார் நிலையில் இருப்பர். பாண்டித்தாவளம் உட்பட ஒன்பது இடங்களில், ஜோதி தரிசனம் நடத்த, வசதி செய்யப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசனத்துக்கு பின், திருவாபரணம் அணிந்த அய்யப்பனை வணங்க, பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும்; இதை சமாளிக்க, மாளிகைப்புறம் நடைப்பந்தலில் இருந்து, மாளிகைப்புறம் மேல்பாலத்துக்கு, புதிதாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மத்திய அதிவிரைவு படையினர், பேரிடர் தடுப்பு நிவாரணப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மகரவிளக்கு நாளில் இளம் பெண்கள் வந்தால், அந்த பிரச்னையை எதிர்கொள்ள, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களை தடுக்க, பக்தர் குழுவினரும் தயாராக உள்ளனர்.
பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற பெண்கள் சிறையில் அடைப்பு: சபரிமலையில், இளம் பெண்கள் தரிசனம் நடத்தியதற்கு எதிராக, எருமேலி பள்ளிவாசலுக்கு செல்ல வந்த, தமிழகத்தின், திருப்பூர், சுசீலாதேவி, 35, ரேவதி, 39, திருநெல்வேலி காந்திமதி, 51, ஆகிய மூவரும், பாலக்காட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிற்றுார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், எருமேலி ஜமாஅத் தலைவர் ஷாஜஹான் கூறியதாவது: பெண்கள் எருமேலி பள்ளி வாசலுக்கு வருவது தவறு இல்லை. எருமேலி பள்ளிவாசலுக்கு, இளம் வயது பெண்கள் வரலாம். சுற்றி வந்து வழிபடலாம். ஆனால், வணக்க அறைக்கு மட்டும் செல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.