புதுச்சேரியை அடுத்த முருங்கம்ப்பாக்கம் சமர சன்மார்க்க ராமாநுஜ பஜனை மடத்தில், ஆண்டாள் திருக்கல்யாண கூடார வல்லி உற்சவம் நேற்று மாலை 6 மணிக்கு பின்னைமர வாகனத்தில், பஜனையுடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் திருக்கல்யாண கூடாரவல்லி உற்சவம் இன்று (11ம் தேதி) காலை 7.00 மணிக்கு கண்ணன்-ஆண்டாள் நாச்சியார் உற்சவ மூர்த்திகளுக்கு கலச திருமஞ்சனத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி சந்துவெளி மாரியம்மன் கோவிலிலிருந்து பள்ளத் தெரு வழியாக பெண் அழைப்பு நடக்கிறது. இதில் பெண்கள் சீர்தட்டு வரிசையுடன் பங்கேற்கலாம். தொடர்ந்து மதியம் 12.05 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் வைபவம் விமர்சையாக நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண கோலத்தில் சுவாமி, தாயார் கோதை நாச்சியாருடன் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். மறுநாள் 12ம் தேதி மாலை 6.30 மணிக்கு பஜனை மட கோவிலில் ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.