சிங்கம்புணரி: பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில் கும்பாபிஷேகம் இந்தாண்டாவது நடக்குமா என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 300 ஊர்களை ஆண்ட வேள்பாரியின் தலைமை பதியாக விளங்கியதும், சங்க இலக்கியத்தில் பறம்புமலை என்று போற்றப்பட்டதுமான பிரான்மலையின் அடிவாரத்தில் குன்றக்குடி ஆதினத்தின் நிர்வாகத்தில் உள்ளது இக்கோயில். பாதாளம், மத்திமம், கைலாயம் என மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள இக்கோயிலில் சிவன் மூன்று நிலைகளில் காட்சி தருகிறார்.
திருப்பணிகள் நிறுத்தம்: பாதாளம் என்ற அடித்தளத்தில் சக்தி சொரூபமாக குயிலமுத நாயகி உடனுறை திருக்கொடுங்குன்ற நாதராகவும், மத்திமம் என்ற பூமித்தளத்தில் கல்யாண கோலமாக காசி விஸ்வநாதர் விசாலாட்சியாகவும், கைலாயத்தில் அர்த்தநாரீஸ்வரரூபமாக மங்கைபாகர் தேனம்மையாகவும் காட்சி தருகிறார். மத்திம தளத்தில் வடுக பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. 3 தளங்களிலும் 3 தெட்சணாமூர்த்திகள் உள்ளனர். இக்கோயிலில் 3 தலை, 3கால், 3 கைகளுடன் கூடிய ஸ்வரலிங்கேஸ்வரரும் உள்ளார். கடந்த 1992 ஏப். 20ம் தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதற்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தும் பொருட்டு 2011 ஐப்பசியில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கியது. கோயில் நிர்வாகத்துடன் பக்தர்களும் திருப்பணிக்கு தேவையான பொருளுதவிகளை செய்துவருகிறார்கள்.திருப்பணிகள் தொடர்ந்து நடந்துவந்த வேளையில் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் பணி தாமதமாகியது.
ஏழு ஆண்டாக திருவிழா இல்லை: குறிப்பாக கோபுரங்கள் விமானங்களை பழுது பார்த்து வண்ணம் பூசுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கும்பாபிஷேகம் தாமதமானதால் கடந்த 7 ஆண்டுகளாக இக்கோயிலில் திருவிழா எதுவும் நடக்கவில்லை. இக்கோயிலில் 10 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழா விசஷேமானது. 9 ம் நாள் நடக்கும் தேரோட்டத்தில் 3 பெரிய தேர்கள் அணிவகுத்து வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இத்திருவிழா உள்ளிட்ட எந்த முக்கிய நிகழ்ச்சி எதுவும் நடைபெறாததால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். திருப்பணிகளை முடுக்கிவிட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த திருப்பணி தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. விரைவில் திருப்பணி முடிக்கப்பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று குன்றக்குடி ஆதீன நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.