பதிவு செய்த நாள்
12
ஜன
2019
11:01
சபரிமலை: மகரவிளக்குக்கு முன்னோடியாக,பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல், நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், உற்சாகத்துடன் பங்கேற்றனர். இன்று பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும், 14ல், மகரவிளக்கு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடு, தீவிரமாக நடந்து வருகிறது. உயர் நீதிமன்றம் நியமித்துள்ள கண்காணிப்பு குழுவினர், இரண்டு நாட்களாக, பம்பை மற்றும் சன்னிதானத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். சபரிமலை மற்றும் பம்பையில், 5,000 போலீசாரும், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களில், தேவைக்கேற்ப போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.கார்த்திகை முதல் தேதியிலிருந்து, எருமேலியில் பேட்டைத்துள்ளல் நடந்தாலும், மகரவிளக்குக்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடக்கும், அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத்துள்ளல், மிகவும் பிரசித்தி பெற்றது.
நேற்று பகல், 12:45க்கு, ஆகாயத்தில் வட்டமிட்டு பறந்த கருடனை பார்த்ததும், பேட்டை ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் இருந்து, அம்பலப்புழா பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட மூன்று யானைகளுடன், பேட்டைத்துள்ளி வந்தனர்.அவர்கள், பெரிய சாஸ்தா கோவிலில் பேட்டைத் துள்ளலை நிறைவு செய்த பின், பெருவழிப்பாதை வழியாக சபரிமலை சென்றனர். இதுபோல ஆலங்காடு பக்தர்கள், மாலை, 3:00 மணிக்கு, வானில் பிரகாசித்த நட்சத்திரத்தை பார்த்ததும், பேட்டை துள்ளினர். இதில் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்த இரண்டு குழுவினரின் பேட்டைத்துள்ளலுடன், பேட்டைதுள்ளல் நிறைவு அடைந்தது. மகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள், இன்று பந்தளம் வலியக் கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து புறப்படுகிறது. அதிகாலை, 4:30 மணி முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும் இந்த திருவாபரணங்கள், உச்சபூஜைக்கு பின், பெட்டிகளில் அடைக்கப்பட்டு, பாதுகாப்புடன் புறப்படுகிறது. இந்த திருவாபரண பவனி, வரும், 14ல், சன்னிதானம் வரும். மகரவிளக்குக்கு முன்னோடியாக, பிரசாத சுத்தி பூஜைகள், இன்று நடக்கும்.