பதிவு செய்த நாள்
12
ஜன
2019
11:01
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், நேற்று தேரோட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டம், கோபி, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா, டிச., 27ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் பூமிதிக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. பாரியூர் கோவில் முன், நிறுத்தியிருந்த, விநாயகர் தேர் மற்றும் அம்மன் தேர்களை, அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர், வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரு தேர்களும், பாரியூர் பஸ் ஸ்டாப் வழியாக, ஈஸ்வரன் கோவிலை அடைந்தது. இன்று மாலை, 4:00 மணிக்கு, தேர் நிலையை வந்தடையும்.
தேரோட்டத்துக்கு பின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், சர்க்கரை வாங்கும் ரேசன்கார்டுதார்களுக்கு, 1,000 ரூபாய் வழங்க இயலாது என, நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. பின், நீதிமன்றமே, வழங்கலாம் என, ஆணை பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு, மக்களுக்கு, மனநிறைவை தரும், தீர்ப்பாக அமைந்துள்ளது. கடந்த, 2004ல், விளையாட்டு துறைக்கென, தனியாக ஒரு பல்கலைஉருவாக்கிய பெருமை, தமிழகத்தில், ஜெயலலிதாவையே சேரும். தமிழக அரசு விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் தரும், அரசாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.