பதிவு செய்த நாள்
12
ஜன
2019
12:01
நாகர்கோவில்:தமிழக - கேரள எல்லையில் உள்ள சிவபார்வதி ஆலயத்தில், 10 கோடி ரூபாய் செலவில், 111 அடி உயரத்தில், உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக - கேரள எல்லையான உதயம்குளம் கரையில், செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி கோவில் உள்ளது.வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், உலகில் மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்க, 2012ல், ஆலய நிர்வாகம் முடிவு செய்தது.இதன்படி, 10 கோடி ரூபாய் செலவில், 111.2 அடி உயரத்தில், எட்டு அடுக்குகளாக, சிவலிங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையிலும், தியான மண்டபங்களைக் கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே, குகைக்குள் செல்வது போன்றும், பரசுராமர், அகத்தியர் போன்ற பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில், சிவலிங்கத்தின் சிலையும், மேல் பகுதியான எட்டாம் நிலையில், கைலாய மலையில், சிவன் - பார்வதி குடிகொண்டிருப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், உலகில் மிக உயரமான சிவலிங்கம் என, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து உள்ளது.இதன் ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது தலைமையிலான அதிகாரிகள் குழு, நேற்று முன்தினம், இதற்கான சான்றிதழை வழங்கியது.நிகழ்ச்சியில், கேரள, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜகோபால் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சிலையை, வரும் மஹா சிவராத்திரியன்று திறக்க முடிவு செய்துஉள்ளனர்.