பதிவு செய்த நாள்
12
ஜன
2019
01:01
தினமும் காலையில் அகத்தியர் அருளிய ‘ஆதித்ய ஹ்ருதயம்’ சொல்வது நல்லது. பொங்கல் நன்னாளில் இதை படித்தால் சூரியனின் அருளால் நல்வாழ்வு உண்டாகும்.
* அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக உயிர்கள் தங்கள் செயல்களை செய்ய பலத்தை கொடுக்கிறாய். உலகிற்கு ஒளி கொடுக்க ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.
* தங்க நிறமானவனே! நீ அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ண மயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலையும் படைக்கிறாய்.
* ஆயிரம் கதிர்கள் கொண்டவனே! ‘சப்த’ என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசஷே பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்பவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது.
* சூரியனே! ஆகாயத்திற்கு நீயே நாதன். ராகு என்னும் இருளைப் பிளந்து கொண்டு வெளியில் வரும் ஆற்றல் கொண்டிருக்கிறாய். ரிக், யஜூர், சாமம் என்ற வேதங்களின் முடிவாக இருக்கிறாய்.
* கண் கண்ட தெய்வமே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன். தட்சிணாயண காலத்தில்
விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாக மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.
*வட்ட வடிவம் உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயமாகும் போது மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா பொருட்களையும் தகிக்கச் செய்பவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே! எல்லாப் பிராணிகளிடமும் அன்பு கொண்டவனே! நட்சத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் அதிபதியே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா. அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற 12 மூர்த்திகளை உள்ளடக்கியவனே! உனக்கு நமஸ்காரம்.
* உருகியோடும் தங்க ஆறு போன்ற பிரகாசிப்பவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருள் போக்குபவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.
* உலகம் அழியும் காலத்தில் இந்த ஜகத்தை நீயே அழிக்கிறாய். மீண்டும் நீயே அதை சிருஷ்டிக்கிறாய். ஜலத்தை வற்றச் செய்கிறாய். உலகையே எரிக்கிறாய். மழை பெய்யச் செய்கிறாய். எல்லா உயிர்களும் அழித்து
அடங்கியிருக்கும் போது நீ மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறாய். சர்வாத்மாவே! சர்வேஸ்வரனே! வேதங்களால் கூட உன்னை அறியமுடியாது. ஆதித்யனே! உனக்கு நமஸ்காரம். உன்னருளால் பொங்கல் நன்னாளில் எட்டு திக்கும் அன்பும், மகிழ்ச்சியும் பொங்கி பரவட்டும்.