பதிவு செய்த நாள்
12
ஜன
2019
01:01
திருவனந்தபுரம்: சபரிமலையில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் தரிசனம் முடித்து விட்டனர். பெண்கள் சென்றால், அய்யப்பனின் பிரம்மச்சரியம் கலைந்து விடும் என்பது மூடநம்பிக்கை, என, கேரளா அமைச்சர், மணி கூறியுள்ளார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில மின்துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகருமான, மணி, அடிக்கடி சர்ச்சைக்குரியை வகையில் பேசுவது வழக்கம். சபரிமலை பற்றி பல முறை கடுமையான கருத்துகளை கூறியுள்ளார்.
கொட்டாரக்கரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சபரிமலை அய்யப்பன் கோவிலில், நுாற்றுக்கணக்கான பெண்கள் தரிசனம் செய்துவிட்டனர். இன்னும் தரிசனம் நடத்துவர். அவர்களுக்கு, போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். பெண்களின் வயதை அளவீடு செய்யும் கருவி ஒன்றும் சபரிமலையில் இல்லை;வேண்டுமானால், 50 ஆயிரம் பெண்களை, இருமுடி கட்டி சபரிமலைக்கு அழைத்துச் செல்ல, மார்க்சிஸ்ட் கட்சியால் முடியும். தடுக்க யாரும் வரமாட்டார்கள்; ஆனால், அது கட்சியின் வேலை அல்ல. கோவிலுக்கு போக வேண்டும் என நினைப்பவர்கள் போகட்டும்; அதுதான் எங்கள் நிலை. பெண்கள் சென்றால், அய்யப்பனின் பிரம்மச்சரியம் கலையும் என கூறுவது ஏமாற்று வேலை. தந்திரிக்கு மனைவி, குழந்தை உண்டு. அதனால், அய்யப்பனுக்கு ஏதாவது நடந்ததா... பந்தளம் அரண்மனைக்கு சொந்தமானது அல்ல சபரிமலை. ஐந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பை செயல்படுத்தும் கடமை, மாநில அரசுக்கு உண்டு. அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, தந்திரிக்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.