சபரிமலை: மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவா பரணங்கள் அடங்கிய பவனி பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை மாலை 6:30 மணிக்கு பொன்னம்பல மேட்டில் மகரஜோதி காட்சி தருகிறது. சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை மாலை மகரவிளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
மகரவிளக்கு நாளில் பந்தளம் அரண்மனையில் இருந்து கொடுக்கப்படும் ஆபரணங்கள் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாரா தனை நடைபெறுகிறது. பந்தளம் அரண்மனையில் ஐயப்பன் வளர்ந்தார். சபரிமலை சென்ற பின் ஐயப்பனை காண பந்தளம் மன்னர் ஆபரணங்களுடன் சென்றார். அதை நினைவு படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பந்தளம் மன்னர் பிரதிநிதியுடன் திருவாபரண பவனி சபரிமலை வருவதாக வரலாறு கூறுகிறது. நேற்று காலை 5:00 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் பந்தளம் சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பகல் 12:30 மணிக்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் தொடங்கியது. அந்த நேரத்தில் ஆகாயத்தில் கருடன் வட்டமிட, சரணகோஷங்கள் முழங்க பகல் 1:00 மணிக்கு திருவா பரணபவனி புறப்பட்டது.
திருவாபரண பெட்டிகளை குருசாமி கங்காதரன் தலைமையில் 23 பேர் அடங்கிய குழுவினர் சுமந்து வருவர். நேற்று ஐரூர் புதியக்காவு தேவி கோயிலில் இந்த பவனி தங்கியது. இன்று ளாகா சத்திரத்தில் தங்கும். நாளை மாலை 5:30 மணிக்கு சரங்குத்திக்கும், 6:20 க்கு சன்னிதானமும் வந்து சேரும். காட்டுப்பாதையில் திருவாபரணங்கள் செல்வதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக கூடவே வருகின்றனர். மகரவிளக்குக்கு முன் னோடியாக நடைபெறும் சுத்திகிரியைகள் சன்னிதானத்தில் தொடங்கியது. நேற்று மாலை தீபாரா தனைக்கு பின்னர் பிராசாத சுத்தி கிரியைகள் நடந்தது. பிம்பசுத்திபூஜைகள் இன்று மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் என்றும், இந்த பூஜைகளுக்கு பின்னர் ஐயப்பனின் சிலையில் கலசாபிஷேகம் நடைபெறும் என்றும் தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறினார். இன்று மாலை 6:00 மணிக்கு பின்னர் பம்பையில், பம்பை விளக்கு நிகழ்ச்சி நடைபெறும். மூங்கில் கம்புகளில் கோபுரங்கள் வடிவமைத்து அதில் விளக்குகள் ஏற்றி பம்பை ஆற்றில் சரண கோஷத்துடன் மிதக்க விடுவர். நாளை மாலை 6:30 மணிக்கு பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும்.
மகர சங்கர பூஜை: சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் நேரத்தில் சபரிமலையில் நடைபெறும் விசேஷ பூஜை மகரசங்கரம பூஜை. இந்த ஆண்டு இந்த பூஜை நாளை இரவு 7:52 மணிக்கு நடக்கிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் சிலையில் அபிஷேகம் செய்யப்படும்.