பதிவு செய்த நாள்
13
ஜன
2019
01:01
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் புதுப்பித்த 30 தீர்த்தங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அர்ப்பணித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வெளியில் இருந்த 42 தீர்த்த குளம், கிணறுகள் 1964ல் ஏற்பட்ட புயலில் சேதமடைந்து புதைந்து போனது. இத்தீர்த்தங்களை விவேகானந்தா கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் 2014 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் கண்டு பிடித்து 5 கோடி ரூபாய் செலவில் 30 தீர்த்தங்களை புதுப்பித்தனர். இதனை பக்தர்கள், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் 30 தீர்த்த கலசத்துடன் வேதவிற்பன்னர்கள் மந்திரம் முழங்க வருண யாக பூஜை நடந்தது. இப்பூஜையில் காலை 8:15 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் பங்கேற்று, அங்குள்ள மங்கள தீர்த்த குளத்தில் புனித நீரை ஊற்றி, மலர்துாவி தரிசனம் செய்தார். கலெக்டர் வீரராகவராவ், தென்மண்டல ஐ.ஜி.,சண்முகராஜேஸ்வரன், ராமநாதபுரம் டி.ஐ.ஜி.,காமினி, எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா, விவேகானந்தா கேந்திரம் துணை தலைவர் பாலகிருஷ்ணன், பசுமை ராமேஸ்வரம் அமைப்பு செயலர் வாசுதேவ், நிர்வாகிகள் ஸ்ரீதர், சரஸ்வதி, ராமேஸ்வரம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் கே.கே.அர்ச்சுணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
காலை 10:10 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள மங்கம்மா சத்திரத்தில் 5 நிமிடம் தியானம் செய்த கவர்னர், காலை 10:35 மணிக்கு தீர்த்த அர்ப்பணிப்பு விழா நடக்கும் கோசுவாமி மடம் வந்து பேசினார். 11:50 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த கவர்னரை கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் வரவேற்றனர். சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் பங்கேற்று தரிசனம் செய்தார். அங்கிருந்து ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்திற்கு சென்றார். பகல் 12:35 மணிக்கு விருந்தினர் மாளிகை சென்று ஓய்வெடுத்த பின் மாலை 5:30 மணிக்கு மண்டபத்தில் இருந்து ரயிலில் சென்னை சென்றார்.