பதிவு செய்த நாள்
23
பிப்
2012
11:02
ஆனைமலை : ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனைமலையில் 400 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்திற்காக ஆனைமலை வனப்பகுதியில் இருந்து 110 அடி நீள கொடிமரம் பக்தர்களால் வெட்டி எடுத்துவரப்பட்டு ஆனைமலை ஆழியாற்றில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பிறகு மேள தாளங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சிகளாக, அடுத்த மாதம் ஏழாம் தேதி இரவு 8.00 மணிக்கு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலமும், இரவு 1.00 மணிக்கு அரவான் சிரசு ஊர்வலமும், எட்டாம் தேதி மாலை 4.00 மணிக்கு பெரிய திருத்தேர் வடம் பிடித்தலும், இரவு 8.30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தலும், ஒன்பதாம் தேதி காலை 8.30 மணிக்கு பூக்குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது. 10ம் தேதி மதியம் 1.00 மணிக்கு திருத்தேர் நிலைநிறுத்தலும், மாலை 3.30 மணிக்கு ஊஞ்சல், பட்டாபிஷேகமும், 11ம் தேதி காலை 11.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 7.00 மணிக்கு போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரமேஷ், விழாக்குழு தலைவர் விக்ரம், கோவில் முறைதாரர்கள், அருளாளிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.