பதிவு செய்த நாள்
18
ஜன
2019
12:01
உத்திரமேரூர்: திருமுக்கூடல், வெங்க டேச பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் இரவில், பார் வேட்டை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் பிரசித்தி பெற்ற அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், தை 2ல், மாட்டுப் பொங்கல் நாளில், பார்வேட்டை திருவிழா கோலாகமாக நடக்கும். அதன்படி, இந்தாண்டிற்கான விழா நேற்று நடந்தது.
விழாவிற்காக, காலை, 7:00 மணிக்கு, காஞ்சிபுரத்தில் இருந்த புறப்பட்ட வரதராஜபெருமாள், மாலை, 4:00 மணிக்கு, பழைய சீவரம் மலையில் உள்ள, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் வந்தடைந்தார். அங்கு சுவாமிக்கு, திருமஞ்சனம் மற்றும் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்ம சுவாமி எழுந்தருளினார். நாதஸ்வரம், மேள வாத்தியம் முழங்க, அப்பகுதி பாலாற்றின் வழியாக திருமுக்கூடலில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலை வந்தடைந்தார். அங்கு, சாலவாக்கம், சீனிவாசப் பெருமாள் மற்றும் காவாந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட, ஐந்து சுவாமி களும், தங்களுக்கான தனித்தனி மண்டபங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பால், தயிர் பன்னீர், இளநீர், பழ வகைகள் மற்றும் வாசனை திரவியங்களால், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில், அப்பகுதியை சுற்றிலும் உள்ள ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். நிறைவாக, ஐந்து சுவாமிகளும், இரவு, 7:00 மணிக்கு, திருமுக்கூடல் வழியாக அந்தந்த பகுதி கோவில்களுக்கு ஊர்வலமாக சென்றடைந்தனர்.