பதிவு செய்த நாள்
18
ஜன
2019
01:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்று, கோவிலில் நடந்த மறுவூடல் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பராசக்தி அம்மனை வழிபடாமல், சிவனை மட்டும் வழிபட்ட, பிருங்கி மகரிஷி முனிவருக்கு காட்சி கொடுக்க, அருணாசலேஸ்வரர் சென்றதால், சுவாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்படும், திருவூடல் விழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று காலை, அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்று, செல்லும் வழியில், பிருங்கி மகிரிஷி முனிவருக்கு காட்சியளித்தல், வைபோகம் நடந்தது. அப்போது, சுவாமி தன்னுடைய நகைகளை திருடர்களிடம் பறிகொடுத்து, ஆபரணமின்றி, கோவிலுக்கு திரும்பும், வைபோகம் நடந்தது. அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்றபோது, வழி நெடுகிலும் பக்தர்கள், நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையே மறுவூடல் ஏற்பட்டு, சமாதானமடையும் விழா நடந்தது. தொடர்ந்து, சிவனும் - சக்தியும் சரிபாதி என்பதை உணர்ந்த, பிருங்கி மகிரிஷி, இருவரையும் வழிபட துவங்கினார்.