பதிவு செய்த நாள்
18
ஜன
2019
01:01
திருத்தணி: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு, உற்சவர் முருகப் பெருமான், திருத்தணி நகர வீதிகளில், உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் திருவிழாவையொட்டி, மூன்று நாட்கள் உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து இறங்கி, வீதிகள்தோறும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அதன்படி, பொங்கல் நாளில், மலைக்கோவில் பின்புறம் உள்ள அர்ச்சகர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில், உற்சவர் முருகப் பெருமான் வலம் வந்து அருள்பாலித்தார்.
நேற்று முன்தினம், இரண்டாம் நாள், மேல்திருத்தணி பகுதியில் உள்ள தெருக்களில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று, மூன்றாம் நாள், காலை, 6:00 மணிக்கு, படிகள் வழியாக, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சன்னிதி தெருவில் எழுந்தருளினார்.பின், அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 8:00 மணிக்கு, திருத்தணி, பெரிய தெரு, சுமைதாரர்கள் உற்சவ பெருமானை, நகரம் முழுவதும் உள்ள வீதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.மாலை, 5:30 மணிக்கு, பழைய பஜார் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் என்கிற சண்முகதீர்த்தக்குளம் மண்டபத்தில், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 8:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றார்.