நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு கரிநாள் திருவிழா நடந்தது. சி.என்.பாளையம் மலையாண்டவர் என்றழைக்கப்படும் ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜ ராஜேஸ்வரர் கோவிலில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு கரிநாள் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, காலை 11:00 மணிக்கு விநாயகர், ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜ ராஜேஸ்வரர், வள்ளி தேவசேனா, சுப்ரமணியர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி உற்சவர்களுக்கும் மற்றும் அனைத்து மூலவர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இரவு 10:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்து ஆலய உலாவாக வந்து, விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜ ராஜேஸ்வரர் ரிஷப வாகனத்திலும், வள்ளி தேவசேனா, சுப்ரமணியர் மயில் வாகனத்திலும் வீதியுலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இன்று 18ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு கோவில் எதிரில் உள்ள குளத்தில் உற்சவர் விநாயகர் தெப்பல் திருவிழா நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர்.