பதிவு செய்த நாள்
19
ஜன
2019
12:01
உடுமலை: ஆல்கொண்டமால் கோவிலுக்கு, பக்தர் களால், 26 கால்நடைகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.உடுமலை அருகேயுள்ள, சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால் நடைகளை காக்கும் தெய்வமாக வணங்கப்படும் இக்கோவிலில், தமிழர் திருநாள் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது.நேற்று, அதிகாலை, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது.
மாலை, 6:00க்கு,மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா மற்றும் வாணவேடிக்கையுடன் திருவிழா நிறைவுபெற்றது.இக்கோவிலில், கால்நடைகள் வளம் பெருக, பால் அபிஷேகம் செய்தும், நேர்த்திக்கடனாக, உருவாரங்கள் வைத்தும்வழிபாடு செய்கின்றனர். அதே போல், தை முதல் நாள் பிறந்த கால்நடைகள், ஆல்கொண்டமாலுக்கு சொந்தம் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த மூன்று நாட்கள் நடந்த திருவிழாவின் போது, 26 கால்நடைகளை விவசாயிகள் கோவிலுக்கு தானமாக வழங்கியதோடு, பராமரிப்பு கட்டணமாக, தலா ஆயிரம் ரூபாய் செலுத்தினர். இதில், ஐந்து கால்களுடன் கூடிய அதிசய காளைக்கன்றும் தானம் பெறப்பட்டது.தற்போது, கோவில் கோசாலையில், தானமாக பெறப்பட்ட, ஆடு, கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு தானமாக பெறப்பட்ட கால்நடைகள், உயர்அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுரைப்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.இந்தாண்டு பெறப்பட்ட கால்நடைகள் உயர் அதிகாரிகள் உத்தரவுஅடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் மேம்பட, வளர்ப்புக்கு வழங்கப்படும், என்றனர்.