பதிவு செய்த நாள்
19
ஜன
2019
12:01
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது.
வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு மாலை, 5:00 மணிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. 6:00 மணிக்கு மேல், மூலவர் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அரூரில், வர்ணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மேலும், நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள ஸ்ரீ வாணீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பொம்மிடி அருணாசல ஈஸ்வரன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மேலும், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.