பதிவு செய்த நாள்
19
ஜன
2019
12:01
பழநி: பழநி தைப்பூசவிழாவை முன்னிட்டு பெரிய நாயகியம்மன் கோயிலில் நாளை திருக்கல்யாணமும், நாளை மறுநாள் தேரோட்டமும் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசவிழா ஜன.,15 முதல் 24 வரை நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்கள் அலகு குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தைப்பூச விழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன் வெள்ளிஆட்டுக்கிடா, காமதேனு வாகனங்களில் திருவுலா வருகிறார். முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஜன.,20) இரவு 8:00 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 9:30 மணிக்கு வெள்ளி ரதத்தில் முத்துக்குமராசுவாமி வள்ளி, தெய்வானையுடன் திருவுலா நடக்கிறது. நாளை மறுநாள்(ஜன.,21) தைப்பூசத்தை முன்னிட்டு, மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பெரிய நாயகியம்மன் கோயிலில் மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. வழக்கமாக இரவு 7:00 மணி தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு நடப்பது பக்தர்கள் கூட்டம் காரணமாக இன்று முதல் ஜன., 23வரை கிடையாது. ஜன.,24ல் பெரியநாயகியம்மன் கோயில் அருகே தெப்பக்குளத்தில் தெப்போற்சவ விழா நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.
பாதைகள் மாற்றம்: தைப்பூசவிழா முன்னிட்டு, பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் பக்தர்கள் மலைக் கோயிலுக்கு செல்லும்போது, தரிசன வழியில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க படிப்பாதை, யானைப்பாதை ஒரு வழிப்பாதைகளாக நாளை முதல் மாற்றப்படுகிறது. மலைக்கோயிலுக்குச் செல்ல யானை பாதையையும், அடிவாரத்திற்கு கீழே இறங்கிவர படிப்பாதையும் பக்தர்கள் பயன்படுத்த வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்கவும், எளிதாக தரிசனம் செய்ய வசதியாக நாளை (ஜன.,20) முதல் மலைக்கோயிலில் அமர்ந்து ஓய்வு எடுக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என போலீசார் கூறினர்.