ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2019 12:01
திருவனந்தபுரம் : சபரிமலையில் தரிசனம் செய்ததாக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு நேற்று (ஜன.,18) தாக்கல் செய்த பெண்களின் பட்டியல் போலி என்பது தெரிய வந்துள்ளது.
போலி ஆவணம் : சபரிமலைக்கு கள்ளத்தனமாக சென்ற கனகதுர்கா, பிந்து ஆகியோர் பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு பிறகு சபரிமலையில் இதுவரை 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட 51 பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறி, தரிசனம் செய்த பெண்களின் பெயர்களுடன் அவர்களின் ஆதார் எண்கள் அடங்கிய பட்டியலையும் தாக்கல் செய்தது. அதில், 24 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 21 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் கோவாவை சேர்ந்தவர்கள் என்றும், கர்நாடகா, புதுச்சேரியை மற்றும் கோவாவை சேர்ந்த தலா ஒருவரும் என 51 பேர் சென்றதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கேரள அரசின் பித்தலாட்டம் : இந்நிலையில் கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் ஆதார் எண்கள் உண்மை தானா என சரி பார்த்த போது, அது போலி என தெரிய வந்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஷங்கர் என்ற டிரைவரின் ஆதார் எண் கலாவதி என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று சென்னை சேர்ந்த மாயான்டி என்பவரின் ஆதார் எண், கலா என்ற பெயரில் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 47 வயதாகும் பரஞ்ஜோதி என்பவர் 16 பேர் கொண்ட ஆண்கள் குழுவில் சென்றுள்ளார். ஆனால் ஆன்லைன் பதிவின் போது அவரது பாலினம் பெண் என பதிவு செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து மக்களை தவறாக வழிநடத்துவதுடன், அய்யப்ப பக்தர்களின் உணர்வுகளை, கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு காயப்படுத்தி உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. போலி ஆவணங்களை தாக்கல் செய்ததற்காக கேரள அரசு மீது வழக்கு தொடர உள்ளதாக சபரிமலை கர்ண சமிதி அமைப்பு தெரிவித்துள்ளது.