பழநி: ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான நேர்த்திக்கடன்கள் செலுத்தி தெய்வங் களிடம் வேண்டிக் கொள்வர். ஆடு, கோழி பலியிடுவதில் துவங்கி தொட்டில் கட்டுவது, மிட்டாய் காணிக்கை, மது படைப்பது வரை செய்கின்றனர். அவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும் அந்த சாமி மீது அபார நம்பிக்கை ஏற்படும்.
அந்தவகையில் பழநி கருப்பணசாமி கோயிலில் எலுமிச்சம் பழத்தை வேல், சூலத்தில் குத்து வது பிரசித்தி பெற்றது. பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இடும்பனை வணங்கிய பின்பே மலைக்கோயிலில் முருகனை வழிபடுகின்றனர். இடும்பன்குளம் அருகே காவலுக்கு கெட்டிக் காரனாம் கருப்பணசாமி தனிசன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரது கருணையயும் அருளையும் பெறுவதற்கு எலுமிச்சை பழத்தை காணிக்கையாக குத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இதன்மூலம் திருமணத்தடை குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் உள்ள தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். தற்போது தைப்பூசவிழாவை முன்னிட்டு குவியும் பாத யாத்திரை பக்தர்கள் கருப்பணசாமிக்கு எலுமிச்சம் பழம் குத்தி வழிபடுகின்றனர். கோயில் பூஜாரி சந்தன கிருஷ்ணன் கூறியதாவது: தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். ஒவ்வொரு அமாவாசை அன்று மாலை 6:00 மணிக்கு கருப்பணசாமி 16 வகை அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடக்கிறது. எலுமிச்சம் பழத்தை நேர்த்திக்கடனாக செலுத்தினால் எண்ணியது நிறைவேறும்.
கருப்பணசாமி கையில் உள்ள தண்டம் மூலம் கெட்டசக்திகளால் பாதிக்கப்படுவோரை குணமடையச் செய்கிறோம். இங்கு கேரளம், தர்மபுரி, கோவை, சேலம் பகுதி பக்தர்களும் நம்பி வாழ்கின்றனர் என்றார். இரவது தொடர்புக்கு: 89253 88812.