பதிவு செய்த நாள்
19
ஜன
2019
01:01
புதுடில்லி: கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த இரு பெண்களுக்கு, 24 மணி நேர பாதுகாப்பு வழங்கும்படி, அந்த மாநில அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம், சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
ஹிந்து அமைப்பினரும், பக்தர்களும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இருப்பினும், கேரளாவைச் சேர்ந்த, கனகதுர்கா, 44, பிந்து, 42, ஆகிய பெண்கள், மாநில அரசு மற்றும் போலீஸ் உதவியுடன், அய்யப்பன் கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்தனர்.இந்த செய்தி, மாநிலம் முழுவதும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. மாநில அரசின் செயல்பாட்டை கண்டித்து, பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. அதை பொருட்படுத்தாத மாநில அரசு, சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்களை, ரகசியமாக அழைத்துச் சென்று, தரிசனம் செய்ய உதவி வருகிறது.இதுவரை, அந்த கோவிலில், 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக, மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கனகதுர்கா, பிந்து ஆகியோருக்கு, அவர்களது குடும்பத்தினரும், உள்ளூர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், பதற்றம் நிலவியது. கனகதுர்காவை, அவரது மாமியார் தாக்கியதால், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.இந்நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், கனகதுர்கா, பிந்து சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் சென்றால், தூய்மைப்படுத்தும் சடங்குகள் செய்யக்கூடாது. அந்த கோவிலுக்கு செல்லும் பெண்களை, எந்த வகையிலும் தடுக்கக் கூடாது என, கூறப்பட்டிருந்தது.
மேலும், சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், எல்.என்.ராவ், தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு முன், நேற்று (ஜன., 18ல்) விசாரணைக்கு வந்தது.மனுக்கள் மீதான வாதத்துக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்களுக்கும், கேரள மாநில அரசு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். பிற விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த, நாங்கள் விரும்பவில்லை.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.