பதிவு செய்த நாள்
19
ஜன
2019
02:01
திருப்பூர்:கொங்கணகிரி கந்தப் பெருமான் கோவிலின், புதிய கிரிவலப்பாதையில் நாளை (ஜன., 20ல்) முதன் முறையாக கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலில் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் ராஜகோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவில் அமைந்துள்ள குன்றை சுற்றிலும், கிரிவலப் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப் பட்டது. கடந்த மாதம், 20 மீ., அகலமும், 500 நீளமும் கொண்ட இந்த பாதை திறந்து வைக்கப் பட்டது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக பாதையோரம் மரக்கன்றுகள் நட்டு, சொட்டு நீர்ப் பாசனமும் ஏற்படுத்தப்பட்டது.
புதிய கிரிவல பாதையில் நாளை (ஜன., 20ல்), தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, முதன் முதலாக கிரிவலம் துவங்கவுள்ளது. மங்கல இசையுடன் கிரிவலம் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை (ஜன., 20ல்) மாலை 5:00 மணிக்கு துவங்கும், கிரிவலம் நிறைவடைந்த பின், கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது.