ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆண்கள் மட்டும் கொண்டாடும் வனப்பேச்சியம்மன் கோயில் திருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தை அடுத்துள்ள சாஸ்தா கோயில் வனப்பகுதியை ஒட்டி வனப்பேச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்கள் மட்டும் வழிபடும் திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். முகவூரைச் சேர்ந்த மூன்று உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் திருவிழா நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று காலை வரை நடந்தது. பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். வனப்பேச்சியம்மன் உட்பட சுற்று பிரகாரங்களில் உள்ள காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 36 மூடை அரிசியில் சோறு சமைக்கப்பட்டது. அரோகரா கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் அன்னதானத்தை சாப்பிட்டு, உணவை தங்கள் கிராமத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பெண்கள் உறங்காமல் காத்திருப்பு: இந்த திருவிழா நடைபெறும் பொழுது முகவூர் கிராமத்திற்குள் பெண்கள் உறங்காமல் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவர். அவற்றை காண ஆண்களுக்கு அனுமதி இல்லை. விளையாட்டுகள் பற்றி பெண்கள் தங்கள் வீட்டாரிடம் கூட தெரிவிக்கமாட்டார்கள்.