பதிவு செய்த நாள்
21
ஜன
2019
12:01
பிரயாக்ராஜ் : பிரயாக்ராஜ் கும்பமேளா மூலம், உ.பி., அரசுக்கு ரூ.1.20 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பு கணித்துள்ளது. உ.பி.,யில், அலகாபாத் என அழைக்கப்பட்ட, பிரயாக்ராஜில், கும்பமேளா விழா நடக்கிறது. கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும், பிரயாக்ராஜில் உள்ள கும்ப நகரி பகுதியில், மகர சங்கராந்தியான, ஜன.,15ல் கும்பமேளா விழா துவங்கியது. சிவராத்திரியான, மார்ச், 4ம் தேதி வரை, 50 நாட்களுக்கு, இந்த திரிவேணி சங்கமத்தில், பக்தர்கள் புனித நீராடுவர். இந்த ஆண்டு, 16 கோடி பேர் வருகைத் தருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கும்பமேளா மூலம் உ.பி., அரசுக்கு ரூ.1.20 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய தொழில் கூட்டமைப்பு கணித்துள்ளது. கும்பமேளாவை நடத்துவதற்காக உ.பி. அரசு 4,200 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய், உ.பி., அரசுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ராஜஸ்தான் உத்திரகண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களும் இதனால் பயனடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.