பதிவு செய்த நாள்
23
ஜன
2019
01:01
பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, பாது காப்பு வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (ஜன., 22ல்) நடந்தது.
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில், பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், குண்டம் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (ஜன., 22ல்) நடந்தது.
சப்-கலெக்டர் காயத்ரி தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் சியாமளா, ஆனைமலை தாசில்தார் (பொ) வெங்கடாச்சலம், டி.எஸ்.பி., சுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த், விழா குறித்து பேசினார்.
அதிகாரிகள் கூறியதாவது:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பிப்., 4ம் தேதி குண்டம் திருவிழா கொடியேற்றத் துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 17ம் தேதி மயான பூஜையும்; 18ம் தேதி சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 19ம் தேதி பூ வளர்ப்பு நிகழ்ச்சி யும்; 20ம் தேதி குண்டம் இறங்குதல், 21ம் தேதி கொடி இறக்குதல், மகாமுனி பூஜையும்; 22ம் தேதி மகா அபிஷேகமும் நடக்கிறது.மூன்றாவது கண் அவசியம் விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில், குண்டம் நடக்கும் இடம், மயான பூஜை நடக்கும் இடம், கோவில் வளாகம் மற்றும் முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
குண்டம் இறங்கும் போது, வரிசையாகவும், நிதானமாகவும் அவசரப்படாமல், குண்டம் இறங்க அனுப்பி வைக்க வேண்டும். திருவிழா நாட்களில், கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கல்லூரி என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள், ஊர்க்காவல் படையினரையும் பயன்படுத்தி கொள்ளலாம்.பஸ்களை நிறுத்த, போலீசார், போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து துறை அலுவலர் ஆகியோர் புலத்தணிக்கை செய்து மக்களுக்கு இடையூறு இல்லாத இடம் தேர்வு செய்ய வேண்டும்.
போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.குண்டம் திருவிழா நடைபெறும்போது, தீயணைப்புத் துறையினர், வாகனத்துடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மயான பூஜை நடைபெறும் இடத்தினை ஆனைமலை, ஒடையகுளம் பேரூராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து தர வேண்டும்.உரிய இடங்களில், மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். மருத்துவ தேவைக்காக முதலுதவி மையம் மற்றும், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இரண்டு ஆம்புலன்ஸ்கள், மூன்று மருத்துவ குழு கோவில் மற்றும் திருமண மண்ட வளாகத்தில் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.