பதிவு செய்த நாள்
23
ஜன
2019
01:01
குளித்தலை: குளித்தலை, கடம்பர்கோவிலில், தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜன., 21ல்)மாலை, சுவாமிகள் சந்திப்பு, காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடந்தன.
சுற்றுவட்டாரத்தில் உள்ள புகழ்பெற்ற எட்டு கோவில்களிலிருந்து வந்த சுவாமிகள், அலங்கரிக்கப்பட்ட இடத்தில் நேற்று (ஜன., 22ல்)பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதன் பின், காவிரி ஆற்றுப் படுகையில், சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீபாராதனை நடந்தது. குளித்தலை காந்திசிலை முன், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியார்ஜுனேஸ்வரர், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியார்ஜுனேஸ்வரர், கடம்பர்கோவில் முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர், அய்யர்மலை சுரும்பார் குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர், கருப்பத்தூர் சுகந்த குந்தாளம்பிகை உடனுறை சிம்மபுரீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு தீபாராதனை முடிந்து, சுவாமிகள் புறப்பாடு நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.