பதிவு செய்த நாள்
24
ஜன
2019
02:01
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, கெரிகேப்பள்ளி ரயில்வே பாலத்தைக் கடந்த விஸ்வரூப கோதண்டராமர் சிலையை, கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் மக்கள் வழியனுப்பினர்.
கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில், விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது.
இச்சிலை செய்ய, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது.
இதில், முகம் மட்டும் வடிவமைத்து, கடந்த மாதம், 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. ஊத்தங்கரை பாம்பாறு தரைப்பாலத்தைக் கடக்க முடியாமல், லாரி
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கூடுதல் இன்ஜின் உதவியுடன், நேற்று முன்தினம் (ஜன., 22ல்), கோதண்டராமர் சிலை பாம்பாறு தரைப்பாலத்தைக் கடந்தார். பின், ஊத்தங்கரை வழியாக வந்த
சிலை, சாமல்பட்டி ரயில்வே பாலத்தை கடக்க முடியாது
என்பதால், கெரிகேப்பள்ளி, போச்சம்பள்ளி, மத்தூர் வழியாக, கிருஷ்ணகிரி வந்தடைய உள்ளார். நேற்று(ஜன., 23ல்) மதியம், கெரிகேப்பள்ளி ரயில்வே பாலத்தின், அடியில் லாரி கடந்து வந்தது. அப்பகுதியில், தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ளதால், கோவிந்தா
கோஷத்துடன் பணத்தை சிலை மீது வாரி இறைத்து, பூஜைகள் செய்து வழிபட்டனர். அதே இடத்தில், நான்கு டயர்கள் வெடித்தால், அவை மாற்றப்பட்டு, குருகப்பட்டி பிரிவு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.